நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

திங்கள், 14 செப்டம்பர், 2015

கைகொடுப்போம் வாழ்வளிப்போம் !

                                         பட  உதவி :- நன்றி www.pathivu.com


ஈழமெனும் திருநாட்டில் இனிதே வாழ்ந்தும்
       இடம்பெயர்ந்து அலைகின்ற சொந்தம் எல்லாம்
வாழவழி இல்லாமல் தவிக்கும்  எங்கள்
       வம்சத்தின் நிலைதன்னை எண்ணிப் பார்ப்போம்
தாழமுக்கம் போல்வந்த போரின் மீதம்
       தவிப்புகளை விட்டேகிக் கலைந்த போதும்
ஏழை'எனும் நாமத்தால் எங்கள் மக்கள்
       எதிர்காலம் அழிவதுதான் இன்னும் ஏனோ ?



திட்டமிட்ட சட்டங்கள் திணித்துக்  கொண்டே
        திருடுகின்றார் கலாச்சாரம் கல்வி எல்லாம்
மொட்டவிழ்ந்த பூமலரின் நிலையைப் போலே
        மூச்சிரைக்கும் இளையோரைக் காப்போம்  இல்லை
கொட்டும்தேள்  போலெம்மைக்  குத்திக் கொல்லக்
        கொடுங்கோலர் பலவுள்ளார் இன்னும் நாட்டில்
வெட்டியவர் திட்டத்தை  வேரும்  சாய்ப்போம்
        விதிமாற்றும் அறிவுதனை விதைத்தே வெல்வோம்  !

சீரான சமூகத்தின் சிறப்பைப் பேணச்
        சிந்திக்கும் புலம்பெயர்ந்த கனவான் எல்லாம்
ஏராளம் உதவிகளை செய்யும் போதும்
        எல்லோர்க்கும் சென்றதுவும் சேர்வ தில்லை
நேரான நோக்கத்தில் உதவும் வண்ணம்
        நெடும்பயணம் கொள்கின்ற நிறுவ னங்கள்
கூரான திட்டங்கள் தீட்டும் போதும்
         குறைகூறி அவைகளையும் குலைத்துச் செல்வர் !

வாய்விட்டுக் கேட்கத்தான் வழியும் இன்றி 
        வருங்காலம் இருள்'என்ற உணர்வும் இன்றி
தாய்தந்தை இல்லாமல் தவிக்கும் பிள்ளை
       தனையணைத்துக் காத்திடுவோம் ! ஈழப் போரில்
சாய்ந்திட்ட சந்ததிகள் கருக்கள் இன்னும்
       சாகாமல் வாழ்கின்ற இடங்கள் தேடி
நோய்விட்டுப் போகின்ற மருந்தைப் போலே
       நுண்ணறிவைப் கொடுத்திடுவோம் ஒன்றாய்க்  கூடி !

தெருப்புல்லை மேய்கின்ற மாட்டைப் போலே
      தெருநாய்கள் பிஞ்சுகளை குதறும் நாட்டில்
இருப்போர்க்கும்  இதயத்தில் வலியைக் கூட்டும்
      இந்நிலையும் மாறிடணும் என்றே நாங்கள்
'அரும்புகள் 'என்  கின்றதொரு அமைப்பின் மூலம்
     அடிக்கல்வி ஊட்டுகிறோம் தேசம் எங்கும்
விருப்போடு இணையுங்கள் வெளிச்சம் தந்தே
      விரைவாக முன்னேற்றி இன்பம் காண்போம் !

கருவோடு இனமழிக்கக் காற்றாய்க்  கூடிக்
      கங்கணமும் கட்டிநிற்கும் கழுதைக்  கூட்டம்
சருகாகிச் சோர்வடைய வைத்தால் நாளை
      சட்டெனவே நிற்குமவர் மமதை ஆட்டம்
பெருவாரித் தமிழ்மக்கள் மேலை நாட்டில்
      பெரும்வசதி கொண்டிருக்கும் போதும் எங்கள்
குருத்துக்கள் வாழ்வளிக்கக் கொஞ்சம் கொஞ்சம்
      கொடுத்தாலே பொருளதவி  மேவும் கல்வி  !

மனதளவில் உடலளவில்  காயம் பட்டும்
      மறக்காத வலியெல்லாம் நெஞ்சில் சேர்த்தும்
இனமென்ற அடையாளம் இழக்கும் மக்கள்
      எம்மவராய் மட்டும்தான் இருக்கின் றார்கள்
தனம்கொண்டும்  மறையாத  வடுக்கள் எல்லாம்
      தளிர்கல்வி ஊட்டுவதால் மறைந்தே நாளை
வனப்பூக்கள் தருகின்ற வாசம் போலே
      வம்சத்தின் குறைமாறி  வாழும் தேசம் !

தரப்படுத்தல் என்கின்ற சட்டம் கொண்டே
      தகுதியுள்ள மாணவனை அழித்தான் பாவி !
பரந்துபட்ட தமிழ்மண்ணின் பசுமை போக்கிப் 
      பல்லினத்தைக் குடியமர்த்திப்  பறித்தான் வாக்கும் !
இரப்போர்க்கும் இல்லையெனா சமூகக் கூட்டில்
      இடிமின்னல் போல்குண்டும் எறிந்தே  கொன்றான் !
அரனுக்கும் அடுக்காத அழிவைச் செய்த
      அந்நியனை வென்றுவிட  அறிவைச் சேர்ப்போம் !

கைகொடுப்போம் வாழ்வளிப்போம் !  கல்வி என்னும்
        கருவூட்டிக் காத்திடுவோம்! முயற்சி என்னும்
மைகொட்டித் தமிழெழுதும் மாண்பைக் கொண்டே
        மறுமலர்ச்சி செய்திடுவோம் !ஆண்டு தோறும்
தைகொடுக்கும் புதிர்ச்சோறாய் இனிமை ஊட்டித்
        தரணியெலாம் தமிழினத்தின் புகழை நெய்வோம்
ஐகொடுக்கும் மரியாதைச் சொல்லைப் போலே
        அறிவூட்டி  எம்மினத்தைக் காப்போம் நன்றே  !

   
பிரியமுடன் சீராளன்

'' அரும்புகள் '' நிறுவனத்தின்  இணையத்திற்கு  எழுதிய கவிதை

20 கருத்துகள்:

  1. அருமை கவிஞரே தாமதமாக கொடுத்தாலும் தரமாக கொடுத்து விடுகின்றீர்கள் மனம் கணக்க வைக்கின்றன சில வரிகள் மிக அருமை.
    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கில்லர் ஜி !

      தங்கள் முதல் வருகைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்
      அதெப்படி பா பதிவிட்டு திரும்ப முதலே கருத்து இடுறீங்க
      மிக்க மகிழ்ச்சி ,,,நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

      நீக்கு
  2. வணக்கம் சீர் ஆள்பவரே,
    இங்கேயும் ஒரு பக்கமா?
    அருமையான வார்த்தைக்கோர்வை,,
    வாழ்த்துக்கள்,கவிஞரே,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பேராசிரியரே !

      இங்கேயும் தான் அங்கு காதல் இங்கு சமூகம் ஆஹா ஆஹா
      அதென்ன சீர் ஆள்பவரே ?

      மிக்க நன்றி வாழ்க வளமுடன்

      நீக்கு
    2. என்ன பாவலரே,
      இது அறிவினா,,,,
      நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. வணக்கம் தமிழ்ப்பூங்கா !

      தங்கள் முதல் வருகைக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள் !

      இனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் !

      நீக்கு
  4. ஈழமெனும் திருநாட்டின் இன்னலதை நன்றாய்
    ........எடுத்துரைத்தாய் இதயமதில் ஏக்கங்கள் மிஞ்ச
    ஊழ்வினையை என்சொல்வேன் உருக்குகின்ற தங்கே
    ........உற்றவர்கள் உதவிக்காய் ஓடுவது எங்கே
    தாழ்வினையை போக்கிடவே தந்துதவ வேண்டும்
    ........தமிழினத்தின் நலன்காக்கத் தளிர்வளர்க்க வேண்டும்
    வாழ்வினையை மாற்றிடவே வழிசமைக்க வேண்டும்
    .........வருங்காலம் எமதென்று மார்தட்ட வேண்டும் !

    ......என்று அருமையாய் வடித்த பாக்கள் செம.
    ஆஹா! எத்தனை அருமையா விருத்தத்தில அத்தனையையும் சொல்லி இருக்கிறீர்கள்.
    எப்படித் தான் வார்த்தைகள் வந்து விழுகின்றனவோ உங்கள் வசம். நடனமே ஆடுகிறாள் நாவுக்கரசி தங்கள் நாவில்
    மெய்மறந்து போகிறேன். சீராளனின் சீர்கள் கண்டு சொக்கவைக்கும் சொற்றொடர்கள். பாவலரே பாக்கள் பொழிந்து பண்படுத்தும் நல்லுள்ளம் கண்டு மகிழ்ந்தேன். மனமார வாழ்த்துகிறேன் வாழி நீ நீடூழி !

    ஊனமுற்ற நெஞ்சங்கள் உவக்க வழியின்றி ஊமையாய் அழுகிறது உள்ளம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ இனியா !

      எண்சீர் விருத்தம் ஒன்றினிலே
      .....எழிலுற எல்லாம் சொல்லுகிறாய்
      கண்ணீர் நழுவக் கன்னத்தில்
      .....கரங்கள் குவித்து நிற்கின்றேன்
      மண்ணீர் இல்லா நிலமென்று
      .....மயங்கும் மலர்கள் சொல்லிவிடும்
      வண்ணக் கவியும் அதுபோல
      .....வலியின் கனத்தைச் வடிக்கிறது !

      மிக்க நன்றி சகோ தங்கள் அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்கும் இனிய விருத்தப் பாவுக்கும்
      வாழ்க வளமுடன் !

      நீக்கு
  5. அன்புச் சகோதரரே!..

    அரும்புகள்என் னும்அருமை அமைப்பைக் காட்டி
      அதற்காக உதவுவீரோ என்றே கூவி
    பெருநிதியோ பிடிநிதியோ தந்து காத்துப்
      பிஞ்சுகளின் கற்கைவளம் பெருக்கக் கேட்டீர்!
    தருகின்றீர் உளமுருகத் தயவாய்க் பாக்கள்!
      தமிழரெனில் உணர்ந்திடுவோம் தலையிற் தாங்கி!
    விருத்தப்பா விழிப்புணர்வைத் தூண்ட நன்கு
      விதைத்தீரே வேண்டுகோளும் விளையும் இன்றே!

    சகோதரரே!.. அருமையான விருத்தப் பாவினால்
    எங்கள் அகத்தில் எரியும் உணர்வுச் சுடரை
    மேலும் தூண்டி விட்டீர்கள்!..
    ஒவ்வொருவரும் இது எனக்கான கடமை என
    எண்ணினால் அனைத்தும் எளிதாக அமையும்!
    முயற்சியுடன் முன்னேறுவோம்!

    இதயம் தொட்டன உங்கள் பாக்கள்!
    எண்ணங்கள் ஈடேற வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன்

      நீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் !

    உள்ளத்தை உருக்கிவிட்டாய் உணர்வை ஊட்டி !
    ............உண்மைதனை அறிந்திங்கு ஒன்றிப் போனேன்
    அள்ளியிங்கு தந்திடத்தான் மனமும் ஏங்கும்
    ...........அரும்பதனின் பணியோங்க வாழ்த்து கின்றேன் !
    கள்ளமற்ற மனத்தவரைக் கயவர் கூட்டம்
    ...........கருணையற்று வதைக்கும்நிலை மாறும் இங்கே !
    வெள்ளமெனத் திரண்டுமக்கள் விடிவை எண்ணி
    ........... வேண்டியதைக் கொடுக்கட்டும் விருப்பம் போல !

    அருமையான நற் பணி இவை அழகாக ஆழமாகத் தொடர வாழ்த்துக்கள் சகோதரா! முடிந்தவரை நாமும் இதற்கு உதவ முன் வருவோம் வாழ்த்துக்கள் வெண்பா மாலை கண்டு மனம் வியப்பில் ஆழ்ந்து விட்டது அதற்காகவும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சகோதரா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன்

      நீக்கு
  8. பாவலரே...!

    தங்கள் கவிமழையில் மனம் கரைகிறது.

    எண்சீர் விருத்தங்கள் கருத்தேந்தி நிற்கும் அழகில் மயங்குகிறேன்.

    தொடர்கிறேன்.

    என்னுயிரைத் தேடி இங்கு வந்தேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  9. மனத்தை நெகிழ்வித்த வரிகள்... ஊர்கூடித் தேரிழுத்தால் நகராத தேரும் நகராதோ.. நம்பிக்கை தளராதிருப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ தங்கள் இனிய கருத்துக்கும் நம்பிக்கை ஊட்டும் வரிகளுக்கும் வாழ்க வளமுடன்

      நீக்கு