நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

வெள்ளி, 9 டிசம்பர், 2022

ஈழமெங்கள் தாய்நாடு




ஈழமெங்கள் தாய்நாடு எம்மவர்க்கும்   சொர்க்கம்

         இயற்கையெழில் கொஞ்சிவரும்  எத்தனையோ நித்தம்  

ஏழைகளும் வாழ்ந்திடவே எருதுகளும் நித்தம் 

         எழில்பொங்கும் வயல்வெளியில்  ஏர்பிடித்து நிற்கும்

வாழைபலா தென்னையெலாம் வழிநெடுகக்  காய்க்கும்

        வளமெல்லாம்  கொண்டமைந்த வண்ணமொளிர் நாட்டில்

வாழ்ந்துவந்த எம்மவர்க்கு வந்ததொரு கேடு

         வக்கிரமாய் எமையழித்து மகிழ்ந்தவனும் பேடு !


மலையழகும் தினையழகும் மங்களமே பாடும்

        மங்கையரின் மனவழகும் மதியழகு சூடும்

சிலையழகு போலங்கே செழித்திருப்பார் என்றும்

        சிட்டுப்போல் எங்கணுமே சிறகடிப்பார் இன்றும்

கலைகளெல்லாம் கற்றேகிக்  கைத்திறனை காட்டிக்

        கனவுகளைக் காட்சிகளை கைப்படவே நெய்வார் 

தலைவாழை இலைபோட்டு  விருந்தளிப்பார் உண்ணத்

        தடையில்லை எவருக்கும்  தாகமறுந் தேக !


பச்சைநிறப்  பசுந்தரைகள்  பட்டாடை போர்த்தப்

         பவனிவரும் பறவைகளும் பார்த்ததனைப் பாடும்

இச்சையுடன் இறங்கிவந்து இரைகளினைத் தேடும்

         இனிமையுடன்  கிசுகிசுத்து  இருக்கைகளில்  கூடும்

அச்சமின்றி அனுதினமும் ஆலங்கிளி பாடும்

         அழகுதனைக்  கண்டுமரை ஆனந்தமாய் ஓடும்

உச்சிமகிழ்ந் திருந்தகுயில் உணர்ச்சியிலே  கூடி

          ஓடிவந்து இசைத்திடுமே உயிர்மொழியில் தோடி !


மந்திகளும் மழையிருட்டில்  மரங்களெல்லாம் தாவும்

         வானரங்கள் கண்டதனை மையலுடன் நாணும்

விந்தையென வண்ணமலர்  விடியுமுன்னே பூக்கும்

          விதவிதமாய்  மணங்கமழ்ந்து வேதனைகள் போக்கும்

அந்திபகல் அரையிருட்டும்  அழகுமான்கள் துள்ளும்

         ஆடுமயில் கூட்டங்களின் அகவலுயிர் அள்ளும்

இந்திரனும் கண்டுவிட்டால் எங்குமவர் செல்லார்

         ஈழநிலம்  சொர்க்கமென்றே இறைவியிடம் சொல்வார் !


 பொங்கிவரும் ஞாயிறொளி  புலர்வதனைக் கண்டு

          பூரித்துப் பார்த்துழவன் புன்முறுவல் பூப்பான்

மங்கிவிட்ட மாலையிலும்  மயங்கியங்கு நிற்பான்

          மறுபடியும் வரும்வரைக்கும் மனதையங்கே வைப்பான்

செங்கதிரின் தலைகவிழும் அழகுண்டு செல்வான்

          சேற்றுநிலம்  ஈன்றவலி சிறுதுயிலில் வெல்வான்

தங்குமிருள் கலைபொழுதில் கரைந்திடவே சேவல்

          தனைமறந்து  விழிதிறப்பான் தென்கிழக்கு நோக்கி !


சொல்லவொரு நாள்போதாச் சொர்க்கபுரி ஈழம்!

          சுடலையதாய் ஆக்கிவிட்டான் சுடுகிறது நாளம்!

வெல்லுமொரு காலமென வெளிநாட்டில் நாளும்!

         வெந்துமடி யும்பொழுதும் வேட்கையது நீளும்!

கல்லுமனப் பாதகரின் காலடியில் துள்ளும்!

        காடையர்கள்  பரம்பரையைக்  காலத்தீ  கொல்லும்!

எல்லையிலாப் பரம்பொருளின் இதயத்தை ஆளும்

        எம்குடியின் மனவலிகள் எதிரிமனை சூழும் !


பாவலர் சீராளன்

புதன், 23 நவம்பர், 2022

மழைக்கால மாற்றங்கள் !

            


கங்குலெழக் காற்றசையக் கார்மழையும் கொட்டக்

       காட்டுநரி ஊழையிலே கானமயில்  ஒடத்

தொங்குவான ரங்குமடி தொட்டுவளர் குட்டி

       தூக்கியெடுத் தோடுகின்ற காட்சியிடை ! அந்தோ !

எங்குமெழில் தந்தவொளித் தாரகைகள் வானை 

       இட்டுநெடு தூரமதாய் ஏகியிருள்  சூழ !    

பொங்குநுரை தீண்டமணற் புட்களிடம் மாறும்.

       போருதவி இன்றிகரைப் பொற்கடகம் ஊரும் !


நீண்டுமலை முட்டதரு நேரெதிராய் நின்றும் 

        நீர்கசிய வேரிடுக்கில் நின்றதலை ஆடும்

கூண்டிழுத்து மூடிவழி கூதலறச் சிட்டு

        கூப்பாடு போடுதலைக் கொக்குயில் கேட்கும்.

பூண்டுசெடிப் பூமுடங்கிப் போனநிசி வேளை

        போசனத்துக் கேதுவழி போயலையும் தேனி

தூண்டிலறு பட்டமீனாய்த் துள்ளியோடும் மானும்

        தூங்கயிடம் இன்றிதலை தூக்கிவானைப் பார்க்கும்!


ஏரியிடை பாய்தவளை ஈட்டுகின்ற சத்தம்

      எங்குமெழப் பொந்தரவம் ஏக்கமுடன் தேடி 

ஈரிழையாய் நாக்குநுனி எச்சிதனைத்  தூவி  

     எங்கதுவோ என்றலைய! ஈசலுண்டு மஞ்ஞை

கூரலகு தீட்டுதலைக் கண்டுதெறித்  தோடிக் 

      குற்றுயிராய் மூச்சுவிடும் கோரமுகம் காட்டி   

மாரிவரும் கோடைவரும் மாற்றமில்லை காலம் 

      மன்பதையில் காணவில்லை மானிடத்தின் கோலம்  ! 



செவ்வாய், 15 நவம்பர், 2022

மரணம் ஒன்றே மருந்தாகும் !

 



மனிதா உன்றன் நிலையென்ன - நீ 

மறுக்கும் அன்பின் விலையென்ன ?


மரத்துப் போகும் மனக்கூடு -அதை 

மாற்றிக் கொடுக்கும் எவ்வேடு ?

மாற்றான் வீட்டில் இழப்பைக் கண்டால் 

மகிழ்வைச் சொல்லத் தெருக்கூடும் - இதை  

மந்திக்  குணமோ விடக்கூடும் !


மரணம் ஒன்றே மருந்தாகும் - வந்த

மயக்கம் போக்கும் விருந்தாகும்

மனிதம்  போற்ற  வாழ்வோர்க் கிங்கே

மறதிக் குணமே சிறப்பாகும் -உயிர் 

மடிந்தும் மறையாப்  பிறப்பாகும்?

 

பெருமை கொள்வதில் பயனில்லை - மதி 

பெருத்தால் மட்டும்  சிறப்பில்லை 

பிழைப்புக் காகப் பேதம் வளர்க்கும்  

பிறவிக் குணமும் இழிவாகும்  - அதைப்

பிரித்தெறி பாவப்  பழிபோகும் !


இருமைப் பட்டுப் போகின்றோம்! - நம் 

இயல்பை மறந்தே வேகின்றோம்! 

இல்லை எனுஞ்சொல் இல்லா திருப்பின் 

இரப்பவர் இங்கே இல்லையடா - மனம் 

இருக்கும் இடமே முல்லையடா !


சிந்தனை என்பதும் ஓராற்றல்! - அதைச்

சிதைப்பவர்க் கில்லை பேராற்றல் !

சித்தம் நிறைக்கும் செயல்கள் செய்தால் 

சிறப்புத் தானாய் வந்துவிடும் - அது 

சினத்தின் அரும்பைக் கொய்துவிடும் ! 


நிந்தனை என்பது பெரும்பாவம்-அதை

நிறுத்திடக் கலையும் உன்சாபம்!

நியதிக ளாலே நினைவைச் செதுக்கு

நிறைவாய் வாழ வழிசெய்யும் - அல்லால்

நினைவும் ஒருநாள் உயிர்கொய்யும்!


செல்வச் செழிப்பில் ஆடாதே- அதன்

செருக்கைத் தலையில் சூடாதே !

சிக்கனப் படுத்திச் சேர்த்தும் பயனிலை

சிதையுடன் சேர்ந்தது வருவதில்லை- சுடும்

செந்தணல் அமைதியும் தருவதில்லை!


சொல்லைச் செயலாய் உருவாக்கு -உன் 

சொப்பனம்  யாவையும் கருவாக்கு !

சோகம் வாழ்வில் தொடர்கதை இல்லை 

சுறுசுறுப் பாக நடந்திடுவோம் -பகை 

சுற்றும் இடத்தைக் கடந்திடுவோம் ! 


பாவலர் சீராளன்

புதன், 15 ஜூலை, 2020

தாய்மையின் இலக்கணம் நீயே !



நூலினைப் போலொரு சேலை - அதை
நூற்கையில்  மணத்திடும்  பெண்மனச் சோலை
பாலினை ஊட்டிடும் தாயே - உன்
பண்பினைப் பேணிடும்  பச்சிளம் சேயே !

உன்னதம் என்பது தாய்மை  -அதை
உணர்த்தி இருந்தது  உம்பரின் வாய்மை
தன்னலம் பேணிடாள் உன்னால்  - தகை
தாங்கிய மாந்தரைத் தந்துளாய்  தன்னால் !

காலையி ரவென அறியாய்    - உன்
கண்விழி தூங்கிய கணப்பொழு  தறியாய்
வேலைகள் ஆயிர மாயும் - பசி
வேட்கையில்  விம்மிய மழலையில் சாயும் !

நள்ளிய வள்ளலாய் இருப்பாய்  - சுய
நலன்கள் மறந்துடல் நோவிலும் தவிப்பாய்
துள்ளிய மகநுதல் மோந்து - படும் 
துயர்களை வருடியே ! தூவுவாய் சாந்து !

வெட்டிய உறுப்பதன்  வலியும் - பின்
வீறிடும் மகக்குரல் கேட்டதும் நலியும்
கொட்டிய குருதியின் களைப்பு - உன்
கொஞ்சலில் மறைத்திடும் குழைந்தையின் நகைப்பு !

எத்தனை பிறவிகள் எடுத்தும் -நின்
உயிர்மையின் சிறப்பினை உலகமே ! கெடுத்தும்
அத்தனை பிறவிகள் தோறும் - நிறை 
அன்பால்  பெற்றவுன்  அணுக்களே நாறும் !

கவிதையில் பொய்களும் இன்றிப்  - பல
கவிஞரில் கருப்பொருள் தேக்கினாய் நன்றி
பவித்திரம் ஆனவள் உன்னால் - இந்தப்
பாருல கழகுறும் பாரடி தன்னால் !

புதன், 27 பிப்ரவரி, 2019

பாட்டரசர்க்கோர் பாமாலை !



அன்னை மொழிக்கொரு ஆணிவேர் ஆகிப் - பல
.....ஆண்டு களாய்த்தமிழ் அளித்திடும் யோகி!
தன்னை நினைந்தவர் தாகமும் அறிவார் - பாத்
.....தடையற ஊட்டியே தம்நிறை வடைவார்!
என்னை யுமோர்கவி ஆக்கிட வந்தார் - தினம்
.....எதுகை மோனையி லக்கணம் தந்தார்!
முன்னைப் பயனென முகிழ்த்துள உறவர் - பலர்
.....முயற்சியில் கைதரும் முத்தமிழ் மறவர்!

நெய்தல் சிறப்புறும் நிலத்தக வொழுக்கம் - கம்பன்
.....நினைவு சுமந்தவர் கவிதைகள் பழுக்கும்!
உய்யும் வழிதனை உணர்த்தியே நிற்பார் - தமிழ்
.....ஊன்றும் நெறிகளை உயிர்ப்புடன் கற்பார்!
பெய்யும் மழைதனைப் பெற்றிடும் மேகம் - கடல்
.....புகுந்ததை அள்ளியே போக்கிடும் தாகம்!
பொய்கை மலரிதழ் புகுந்திடும் தேனாய் - கவி
.....பொலிந்திடும் பாவலர் பறந்திடும் வானாய்!

மஞ்சரி போட்டுயிர் மன்றத்தில் ஏற்றித் - தமிழ்
.....மகனென வாழ்த்தியே மகிழ்ந்துளம் போற்றி
விஞ்சியே நீர்..தரும் வியன்றமிழ் கற்பேன் - பலர்               
....வியந்திடப் பாக்களை விதைத்துமே நிற்பேன் !
எஞ்சிய காலமும் இயன்றமிழ் பாடக் - கலை
....எழிலென விளங்கிடும் காப்பியம் சூடப்
பஞ்சக ரத்தனைப் பணிந்தசை படிப்பேன் - புகழ்
....பாரதி தாசரைப் பாட்டிலே வடிப்பேன் !

பாவலர் .வீ. சீராளன்
27-02-2019

புதன், 20 ஜூன், 2018

வெள்ளொத்தாழிசை


நேரிசை  வெள்ளொத்தாழிசை !

தாய்மொழிச் சிறப்பு !

நாவாரப் பாடும் நறுந்தமிழே ! நற்குரவர்
தேவாரப் பாட்டின் திருத்தமிழே - கோவாத
பூவாரம் ஆவாய் பொலிந்து !

நற்றுணை ஆகும் நறுந்தமிழே ! நற்குரவர்
சொற்றுணை ஆகும் சுடர்தமிழே - பற்றுடனே
பொற்றுணை ஆவாய் பொலிந்து !

நன்னெறி ஊட்டும் நறுந்தமிழே ! நற்குரவர்
தன்னெறி காட்டும் தனித்தமிழே - மன்பதையின்
பொன்னெறி ஆவாய் பொலிந்து !



இன்னிசை வெள்ளொத்தாழிசை!
 
மானிடம் காப்போம் !

வண்ணக் கனவுகளில் வாழும் மனிதர்களின்
எண்ணக் குவளைகளில் ஏந்தும் பகையழிய
பண்ணைக் கொடுப்போம் பணிந்து !

வல்லார் அடிமைகளாய் வாழும் மனிதர்களின்
சொல்லாத் துயர்களையத் தோகை மனம்விரித்துப்
பல்லாண் டணைப்போம் பணிந்து !

வாசம் மதுவென்று வாழும் மனிதர்களின்
வேசம் களைந்தெறியும் வேட்கை தருவித்துப்
பாசம் கொடுப்போம் பணிந்து !

 
பாவலர் வீ.சீராளன் 



 

ஞாயிறு, 29 நவம்பர், 2015

வெண்பாக் கொத்து ! மொழியானவள் !



குறள் வெண்பா !


அன்பில் முகிழ்ந்த அருந்தமிழாள் இவ்வுலகில்
முன்னை முகிழ்த்த மொழி !

 நேரிசை சிந்தியல் வெண்பா !

அன்பில் விளைந்த அருங்கவியால் ஆன்றோரும்
மன்புகழ் பாடி வளம்சேர்க்க - என்றென்றும்
முன்னின்று காக்கும் மொழி!

இன்னிசைச் சிந்தியல் வெண்பா !

அன்பில் அணைத்தொருகை ஆடை களைந்தொருகை
இன்பக் குளியலுடன் இன்னிசையும் தந்துவிட
அன்னையே ஆர்த்த மொழி !

நேரிசை வெண்பா !


அன்பில் மலரும் அடிநெஞ்சில் தேன்சுரக்கும்
பொன்னின் நிகராய்ப் பொலிந்திருக்கும் - என்னவளின்
கன்னக் குழியின் கவிதை இலக்கணத்தில்
முன்னே இருக்கும் மொழி !

இன்னிசை வெண்பா !


அன்பில் பிறப்பொளிரும் ஆன்ம வலம்மேவும்
சின்னவள் மூச்சென்று செங்காந்தள் பூத்திருக்கும்
புன்னை வனக்குயிலும் பூபாளம் பாடிநிற்கும்
என்னுயிரும் ஏற்ற மொழி !

பஃறொடை வெண்பா!

அன்பில் அகம்நிறையும் ஆயுள் அதிகரிக்கும்
முன்பின் முடிவென்ற மூத்தோரின் - பொன்னுரைகள்
சென்னி புகுந்தளிக்கச் சித்தம் தெளிவடையத்
துன்னார் தவறைத் தொலைவாக்கும் ! ஔடதமாய்
வன்மம் மறைக்கும் மொழி !

இலக்கண விளக்கம்
வெண்பா கொத்தெனும் இப்பாட்டில் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா இடம்பெறவேண்டும்.

அனைத்து வெண்பாக்களிலும் முதல் சீர் ஒன்றாக வரவேண்டும். ஈற்றுச்சீரும் ஒன்றாக வரவேண்டும்.

மேல் உள்ள வெண்பாக்கள் 'அன்பில் ', என்ற சீரை முதல் சீராகக் கொண்டுள்ளன. 'மொழி ' என்ற சீரை ஈற்றுச் சீராகக் கொண்டுள்ளன.

பிரியமுடன் சீராளன் !