நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஞாயிறு, 29 நவம்பர், 2015

வெண்பாக் கொத்து ! மொழியானவள் !



குறள் வெண்பா !


அன்பில் முகிழ்ந்த அருந்தமிழாள் இவ்வுலகில்
முன்னை முகிழ்த்த மொழி !

 நேரிசை சிந்தியல் வெண்பா !

அன்பில் விளைந்த அருங்கவியால் ஆன்றோரும்
மன்புகழ் பாடி வளம்சேர்க்க - என்றென்றும்
முன்னின்று காக்கும் மொழி!

இன்னிசைச் சிந்தியல் வெண்பா !

அன்பில் அணைத்தொருகை ஆடை களைந்தொருகை
இன்பக் குளியலுடன் இன்னிசையும் தந்துவிட
அன்னையே ஆர்த்த மொழி !

நேரிசை வெண்பா !


அன்பில் மலரும் அடிநெஞ்சில் தேன்சுரக்கும்
பொன்னின் நிகராய்ப் பொலிந்திருக்கும் - என்னவளின்
கன்னக் குழியின் கவிதை இலக்கணத்தில்
முன்னே இருக்கும் மொழி !

இன்னிசை வெண்பா !


அன்பில் பிறப்பொளிரும் ஆன்ம வலம்மேவும்
சின்னவள் மூச்சென்று செங்காந்தள் பூத்திருக்கும்
புன்னை வனக்குயிலும் பூபாளம் பாடிநிற்கும்
என்னுயிரும் ஏற்ற மொழி !

பஃறொடை வெண்பா!

அன்பில் அகம்நிறையும் ஆயுள் அதிகரிக்கும்
முன்பின் முடிவென்ற மூத்தோரின் - பொன்னுரைகள்
சென்னி புகுந்தளிக்கச் சித்தம் தெளிவடையத்
துன்னார் தவறைத் தொலைவாக்கும் ! ஔடதமாய்
வன்மம் மறைக்கும் மொழி !

இலக்கண விளக்கம்
வெண்பா கொத்தெனும் இப்பாட்டில் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா இடம்பெறவேண்டும்.

அனைத்து வெண்பாக்களிலும் முதல் சீர் ஒன்றாக வரவேண்டும். ஈற்றுச்சீரும் ஒன்றாக வரவேண்டும்.

மேல் உள்ள வெண்பாக்கள் 'அன்பில் ', என்ற சீரை முதல் சீராகக் கொண்டுள்ளன. 'மொழி ' என்ற சீரை ஈற்றுச் சீராகக் கொண்டுள்ளன.

பிரியமுடன் சீராளன் !

திங்கள், 23 நவம்பர், 2015

ஈழம் பிறக்கும் இனிய நாள் !

             
             


கருவோடு  இனமழித்துச் சென்றான் - உலகின்
       கொல்லாமை கற்பித்த புத்தனையும் கொன்றான்
விருத்தியில்லை இனியென்றான் ஈழம்  - அவன்
       விழியறியா(து)  மாவீரம் விதைத்திட்ட ஆழம்
தெருவோடு சுமந்திடுவான் ஒருநாள் - பாவத்
       தேகத்தை அழித்தெமக்குத் தந்திடுவான் பெருநாள்
உருவாகும் ஈழத்தின் ஒளியில்  - அவன்
       உணர்வெல்லாம் சருகாகும் மரணத்தின் குழியில் !

சொல்லல்ல இக்கவியின்  ஊற்று - ஈழச்
       சோகத்தில் எரிகின்ற செந்தமிழின் கீற்று
எல்லோரும் வணங்குகின்ற வாரம் - இனியும்
       எமக்கில்லை கண்ணீரின் கனம்கொண்ட பாரம்
வில்லெடுத்து வேங்கையெனக் காட்டு  - பகை
       விடமழித்த புகழ்சொல்லி இடைவாளைத் தீட்டு
வல்வையதன்  புதல்வனுடன்  மீழ்வோம்  - எங்கள்
      வரலாற்றுத் தமிழோடு வம்சத்தை ஆள்வோம்  !

கார்த்திகை பூக்கின்ற மாதம்  - உயிரில்
       கண்விழிக்கும் மாவீரர் உரம்கொண்ட நாதம்
போர்க்களத்தில் பொழிந்திடுமே மேகம் -  மறவர் 
       பூதவுடல்  பூரிக்க உயிர்கொள்ளும் தேகம்
ஆர்ப்பரிக்கும் கடல்போல  எழுவீர் - இனம்
      ஆள்கின்ற வலிமையெலாம்  தந்திட்டு போவீர்
போர்ப்படையில் புகழ்சேர்த்தல் சிறப்பு - அந்தப் 
      பொறிமுறையே விரைவாக்கும் ஈழத்தின் பிறப்பு !

                                வீர வணக்கம்


வெள்ளி, 13 நவம்பர், 2015

அழகே தமிழே எனதுயிரே !

          
(அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
             =========================


தன்னுயிர் போகும் போதும்
       தண்டமிழ் பாடும் மாந்தர்
பொன்னுடல் எரியும் போதும்
       பூந்தமிழ் வாசம் வீசும்!
என்னுயிர் சுமக்கும் கூட்டில்
       இருந்திடும் ஆசை கோடி!
தொன்மையாம் தமிழைப் பாடிச்
        சூழ்புகழ் காண வேண்டும் !

சுந்தரத் தமிழே உன்னைச்
        சுமந்திடும் என்றன் நாவில்
மந்திரச்  சொல்லாய் நாளும்
        மகிழ்நிறை வாக்க வேண்டும்!
சிந்துரம் இட்டே நெற்றி
        சிறப்புறும்  மாந்தர் போன்றே
வந்தருள் செய்வாய் தாயே!
        வளமெலாம் சேர்ப்பாய் நீயே!

கற்றறிந் துலவும் மாந்தர்
        காரிகை நன்னூல் தம்மால்
பெற்றறிந் தோங்கும் வண்ணம்
        பிழையறக்  காப்பாய் அம்மா!  
மற்றறி வோங்க செய்தே
        மன்பதை வெல்ல வைப்பாய்!
சிற்றறி வழித்தே தூய
        செந்நெறி ஊட்டு வாயே!

எந்தையும் தாயும் போலும்
        இணையிலா மக்கள் போலும்
விந்தையாம் உலகைக் காக்கும்
        வேதியன்  அருளைப் போலும்
சிந்தையில் தோன்றும் எல்லாம்
        செழிப்புற வேண்டும் தாயே!
அந்தமிழ்  அமுதை ஊட்டி
        அவனியில் என்னைக் காப்பாய்!

பிரியமுடன் சீராளன்