நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஞாயிறு, 29 நவம்பர், 2015

வெண்பாக் கொத்து ! மொழியானவள் !



குறள் வெண்பா !


அன்பில் முகிழ்ந்த அருந்தமிழாள் இவ்வுலகில்
முன்னை முகிழ்த்த மொழி !

 நேரிசை சிந்தியல் வெண்பா !

அன்பில் விளைந்த அருங்கவியால் ஆன்றோரும்
மன்புகழ் பாடி வளம்சேர்க்க - என்றென்றும்
முன்னின்று காக்கும் மொழி!

இன்னிசைச் சிந்தியல் வெண்பா !

அன்பில் அணைத்தொருகை ஆடை களைந்தொருகை
இன்பக் குளியலுடன் இன்னிசையும் தந்துவிட
அன்னையே ஆர்த்த மொழி !

நேரிசை வெண்பா !


அன்பில் மலரும் அடிநெஞ்சில் தேன்சுரக்கும்
பொன்னின் நிகராய்ப் பொலிந்திருக்கும் - என்னவளின்
கன்னக் குழியின் கவிதை இலக்கணத்தில்
முன்னே இருக்கும் மொழி !

இன்னிசை வெண்பா !


அன்பில் பிறப்பொளிரும் ஆன்ம வலம்மேவும்
சின்னவள் மூச்சென்று செங்காந்தள் பூத்திருக்கும்
புன்னை வனக்குயிலும் பூபாளம் பாடிநிற்கும்
என்னுயிரும் ஏற்ற மொழி !

பஃறொடை வெண்பா!

அன்பில் அகம்நிறையும் ஆயுள் அதிகரிக்கும்
முன்பின் முடிவென்ற மூத்தோரின் - பொன்னுரைகள்
சென்னி புகுந்தளிக்கச் சித்தம் தெளிவடையத்
துன்னார் தவறைத் தொலைவாக்கும் ! ஔடதமாய்
வன்மம் மறைக்கும் மொழி !

இலக்கண விளக்கம்
வெண்பா கொத்தெனும் இப்பாட்டில் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா இடம்பெறவேண்டும்.

அனைத்து வெண்பாக்களிலும் முதல் சீர் ஒன்றாக வரவேண்டும். ஈற்றுச்சீரும் ஒன்றாக வரவேண்டும்.

மேல் உள்ள வெண்பாக்கள் 'அன்பில் ', என்ற சீரை முதல் சீராகக் கொண்டுள்ளன. 'மொழி ' என்ற சீரை ஈற்றுச் சீராகக் கொண்டுள்ளன.

பிரியமுடன் சீராளன் !

15 கருத்துகள்:

  1. பாராட்ட தகுதியில்லை கவிஞரே ரசித்தேன்
    நானெல்லாம் ஒப்பாரி பாட்டு எழுதத்தான் லாயக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜி !

      உடன் வருகைக்கும் கருத்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் .....உங்கள் பதிவுகளுக்கு ஊரெல்லாம் ரசிகர்கள் இருக்கும் போது எழுதும் பாட்டு எதுவா இருந்தால் என்ன
      மக்கள் மனதில் நின்று நிலைத்தால் போதுமே !
      நன்றி நன்றி

      நீக்கு
  2. அற்புதம் அற்புதம்
    தேனுடன் கலந்து மருந்தைத் தருவது போல்
    அற்புதமான கவிதையுடன் இலக்கணத்தையும்
    கற்பித்துப்போனப் பாங்கு மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரமணி ஐயா !

      தேனோடு பாலையும் திரட்டிக் கொடுத்த என் குருவுக்கே எல்லாப் புகழும் .......தங்கள் வருகைக்கும் மனம் நிறைந்த கருத்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
      வாழ்க வளமுடன்

      நீக்கு
  3. அழகிய கவிதைகள், அதனினும் நல்ல விளக்கம்,
    நானெல்லாம் எட்டி நின்று ரசிக்கும் ஜாதி,
    அருமை அருமை தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாவலரே !

      எட்டி நின்று ரசிக்கும் ஜாதி அல்ல எல்லோருக்கும் ஆசான் நீங்கள் இப்படி சொல்லலமா ம்ம்ம்ம் நோ என் குரு எனக்குத் தந்த கொடை இது ! மிக்க நன்றி பாவலரே தங்கள் இனிய வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      நீக்கு
  4. பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா தங்கள் இனிய வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      நீக்கு
  5. நன்று. நீங்கள் சொல்ல தெல்லாம் உண்மை.
    எங்கள் மொழி அழகு! அது நின்று விளையாடிய நிலம் அழகு! அதைப்பேசும் நா அழகு! அதை எழுதும் உங்கள் தமிழ் அழகு! வாழ்த்துக்கள் கவிஞரே! தொடர்ந்து எழுதுங்கள்! தமிழில் நனையுங்கள!
    தமிழின் மகத்தான கவிஞனாக நீங்கள் வளம் பெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய வணக்கம் ஜூட் அருளப்பன் !

      தங்கள் வரவு புதிதாய் இருப்பினும் தமிழை நேசித்து அழகாகக் கருத்திட்டமைக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் உம்போன்றோரின் வாழ்த்தும் என்னை இன்னும் மேலுயர்த்தும் நன்றி வாழ்க வளமுடன்

      நீக்கு
  6. வரி ஒன்று "சொல்ல தெல்லாம்" "என்பதை சொல்வ தெல்லாம்" என்று திருத்திப் படிக்கவும். தவறுக்கு வருந்துகிறேன். நன்றி!

    பதிலளிநீக்கு
  7. ஆகா!தேன்தமிழின் அழகை எல்லாம் எடுத்துரைத்தீர் மனம் குளிர, தம் கைபட மிளிர்கிறது மேலும் அசந்திட, அருமை சீர் அருமை மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.........!

    விரும்பி அளித்தவெண் பாக்கொத் தனைத்துமே
    கரும்புச் சுவையென்பேன் கசிந்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் இனியாம்மா !

      தங்கள் வரவு கண்டே மிக மகிழ்கிறேன் அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் வாழ்க வளமுடன் !

      நீக்கு
  8. பதிவிற்கு அன்புடன் வாழ்த்துகள்
    எனது இரண்டாவது வலையில்தான்
    ஆக்கங்கள் போடுகிறேன்.
    இங்கு வாருங்கள்:- https://kovaikkothai.wordpress.com/

    பதிலளிநீக்கு