நூலினைப் போலொரு சேலை - அதை
நூற்கையில் மணத்திடும் பெண்மனச் சோலை
பாலினை ஊட்டிடும் தாயே - உன்
பண்பினைப் பேணிடும் பச்சிளம் சேயே !
உன்னதம் என்பது தாய்மை -அதை
உணர்த்தி இருந்தது உம்பரின் வாய்மை
தன்னலம் பேணிடாள் உன்னால் - தகை
தாங்கிய மாந்தரைத் தந்துளாய் தன்னால் !
காலையி ரவென அறியாய் - உன்
கண்விழி தூங்கிய கணப்பொழு தறியாய்
வேலைகள் ஆயிர மாயும் - பசி
வேட்கையில் விம்மிய மழலையில் சாயும் !
நள்ளிய வள்ளலாய் இருப்பாய் - சுய
நலன்கள் மறந்துடல் நோவிலும் தவிப்பாய்
துள்ளிய மகநுதல் மோந்து - படும்
துயர்களை வருடியே ! தூவுவாய் சாந்து !
வெட்டிய உறுப்பதன் வலியும் - பின்
வீறிடும் மகக்குரல் கேட்டதும் நலியும்
கொட்டிய குருதியின் களைப்பு - உன்
கொஞ்சலில் மறைத்திடும் குழைந்தையின் நகைப்பு !
எத்தனை பிறவிகள் எடுத்தும் -நின்
உயிர்மையின் சிறப்பினை உலகமே ! கெடுத்தும்
அத்தனை பிறவிகள் தோறும் - நிறை
அன்பால் பெற்றவுன் அணுக்களே நாறும் !
கவிதையில் பொய்களும் இன்றிப் - பல
கவிஞரில் கருப்பொருள் தேக்கினாய் நன்றி
பவித்திரம் ஆனவள் உன்னால் - இந்தப்
பாருல கழகுறும் பாரடி தன்னால் !
அருமை கவிஞரே...
பதிலளிநீக்குதாய்மையை போற்றிய கவிமழை.
மிக்க நன்றி ஜி
நீக்கு